தீர்ப்பு

நீதிபதி ஸிப்கத்துல்லாஹ் கானின்(எஸ்.யு.கான்) தீர்ப்பின் சாரம்சம்


லக்னோ,அக்.1:கோயிலை இடித்து பாப்ரி மஸ்ஜித் கட்டப்படவில்லை என்பதை பாப்ரி மஸ்ஜிதின் நில உரிமைத் தொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்புக் கூறிய அலகாபாத உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சில் மூன்று நீதிபதிகளில் ஒருவரான ஸிப்கத்துல்லாஹ் கான் தெளிவுப்படுத்தியுள்ளார்.

அவருடைய தீர்ப்பின் முக்கிய பகுதிகள்:

1.சர்சைக்குரிய கட்டிடம் பாபரின் உத்தரவின் பெயரால் கட்டப்பட்ட மஸ்ஜிதாகும்.

2.சர்ச்சைக்குரிய பகுதி பாபருக்கோ அல்லது அவருடையை கட்டளைப்படி மஸ்ஜிதை நிர்மாணித்தவருக்கோ உரிமையுடையது என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் இல்லை.

3.எந்தவொரு கோயிலையும் இடித்து மஸ்ஜித் கட்டப்படவில்லை.

4.மஸ்ஜித் கட்டப்படுவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பே கோவில்கள் அழிந்துவிட்டிருந்தன. ஆதலால், கோயில் சிதிலங்களில் சிலவற்றை மஸ்ஜிதை கட்டுவதற்கு பயன்படுத்தியிருக்கலாம்.

5.சர்ச்சைக்குரிய பரந்த நிலத்தின் ஒரு சிறிய பகுதியில் ராமன் பிறந்த இடம் இருப்பதாக நீண்டகாலமாகவே இந்துக்கள் கருதி வருகின்றனர். எனினும், பிரச்சனைக்குரிய பரந்த நிலத்திற்குள் ராமர் பிறந்த இடமாக, எந்தவொரு குறிப்பிட்ட சிறிய இடமும் சுட்டிக்காட்டப்படவில்லை.

6.பாப்ரி மஸ்ஜித் கட்டப்பட்டதற்கு பிறகே இவ்விடத்தில் ராமன் பிறந்தான் என்ற வாதம் எழுந்தது.

7.1855 ஆம் ஆண்டிற்கு முன்பே ராம் சாபுத்ரா மற்றும் சீதாவின் அடுக்களையையும் இந்துக்கள் வழிபடத் துவங்கியுள்ளனர்.

8.அதனால்தான் சர்ச்சைக்குரிய நிலம் இரு பிரிவினருக்கும் உரிமையுடையது.

9.வசதிக்காக இரு பிரிவினரும் சர்ச்சைக்குரிய இடத்தில் வேறுபட்ட பகுதிகளை பயன்படுத்தியிருந்தாலும் அது குறிப்பாக பிரிக்கப்படவில்லை.

10.நிலத்தின் உரிமை வாதம் எப்பொழுது துவங்கியது என்பதை துல்லியமாக நிரூபிக்க இரு தரப்பினருக்கும் இயலவில்லை.

11.1949 ற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் ராமன் மஸ்ஜிதின் கையக்கோபுரத்திற்கு நேர்கீழே உள்ள இடத்தில்தான் பிறந்தான் என்று இந்துக்கள் நம்பிக்கைக்கொள்ள ஆரம்பித்தனர்.

12.1949 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி அதிகாலையில் மஸ்ஜிதின் மத்திய கோபுரத்திற்கு கீழே ராமனின் சிலை வைக்கப்பட்டது.

13.மேற்கூறப்பட்ட சாரம்சத்தின் அடிப்படையில் நோக்கும்போது, பிரச்சனைக்குரிய மொத்த வளாகத்தையும் இந்துக்கள், முஸ்லிம்கள் என இருபிரிவினரும் கூட்டாக அனுபவிக்க பாத்யதை உள்ளது. இறுதிகட்ட பாகப்பிரிவினை நடவடிக்கையின்போது, ராமர் சிலை அமைந்துள்ள பகுதியான மஸ்ஜிதின் மைய கோபுரத்தின் கீழே உள்ள நிலத்தை இந்துக்களுக்கு ஒதுக்கவேண்டும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்




பாப்ரி மஸ்ஜித்:தீர்ப்பு ஆச்சரியமளிக்கிறது - வி.ஆர்.கிருஷ்ணய்யர்


அக்.1:பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பு முற்றிலும் ஆச்சரியமளிப்பதாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், மனித உரிமை ஆர்வலருமான வி.ஆர்.கிருஷ்ணய்யர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறியுள்ளதாவது:"இது சரியான தீர்ப்பு அல்ல. ஒன்று முஸ்லிம்களுக்கு நிலத்தை அளிக்கவேண்டும். இல்லாவிட்டால், ஹிந்துக்களுக்கு அளிக்கவேண்டும். இரண்டுமில்லாமல், 3 நீதிபதிகள், பாப்ரி மஸ்ஜித் நிலத்தை 3 துண்டுகளாக பங்கு வைத்தது சரியல்ல. இந்த தீர்ப்பு வெறும் தந்திரமே.

நீதிபதிகள் மதம் மற்றும் ஜாதிக்கு அப்பால் நின்று சிந்திக்க வேண்டும். அவர்களிலும், மதவெறி தீண்டிவிட்டதா என்ற ஐயத்தை உருவாக்குகிறது 3 பங்காக பிரிக்கவேண்டும் என்ற இத்தீர்ப்பு.

இரு பிரிவினர்களிடையேயான நிலம் தொடர்பான வழக்கில் தீர்மானம் எடுக்க ஒரு உயர்நீதிமன்றம் 62 ஆண்டுகள் வரை காத்திருந்தது உலகில் எங்கும் காணமுடியாத ஒன்று. இதற்காக உச்சநீதிமன்றம் நேரத்தை செலவிட்டதும் ஏற்றுக்கொள்ளவியலாது. காலதாமதமான சூழ்நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பை எப்பொழுது, எவ்வாறு வழங்கவேண்டும் என உபதேசித்துள்ளது. இதுதானா ஒரு உச்சநீதிமன்றத்தின் பொறுப்புணர்வு? உயர்நீதிமன்றம் என்பது பொறுப்புணர்க்கொண்ட நீதிமான்களின் அரங்காகும். எப்பொழுது தீர்ப்பு வழங்கவேண்டும் என உத்தரவிடுவது வெட்கக்கேடானதாகும்.

ஒரு உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பெயரால் 144 தடை உத்தரவு பிறப்பித்து தேசத்தை ஸ்தம்பிக்க வைத்ததை அங்கீகரிக்க இயலாது. தடை உத்தரவின் மூலம் அரசு பொதுவாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

ஒரு நிலம் தொடர்பான வழக்கின் பெயரால் மக்களின் நடமாடும் சுதந்திரத்தையும், கருத்து சுதந்திரத்தையும் இன்னும் சில மனித உரிமைகளையும் தடைச்செய்தது கண்டிக்கத்தக்க ஒன்று என்று மட்டுமே கூற இயலும்.

நம்முடைய தேசம் 5000 ஆண்டுகள் முதிர்ச்சியுடைய கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்டது. ஒரு தீர்ப்பின் பெயரால், மக்கள் பரஸ்பரம் போர்புரிவார்கள் என்ற தவறான புரிந்துணர்வால் லட்சக்கணக்கான ராணுவத்தினரையும், காவல்துறையினரையும் பயன்படுத்தியது தேசத்திற்கு அவமானமாகும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் இனிமேலும் தேசத்தை அவமானத்திற்குள்ளாக்க வேண்டாம் என பிரதமர் மன்மோகன்சிங்கை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வி.ஆர்.கிருஷ்ணய்யர் தெரிவித்துள்ளார்.

செய்தி:மாத்யமம்




பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:இந்திய மதசார்பின்மையின் மீது விழுந்த அடி என பிரபல வரலாற்றாய்வாளர்கள் அறிக்கை

 
புதுடெல்லி,அக்.2:அயோத்தியா வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு தேசத்தின் மதச்சார்பின்மைக்கும், நீதித்துறையின் கட்டமைப்பின் மீதும் விழுந்த அடி என பிரபல அறிவுஜீவிகளும், வரலாற்றாய்வாளர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ரொமீலா தாப்பர், டாக்டர்.கெ.என்.பணிக்கர், கெ.எம்.ஸ்ரீமாலி, டி.என்.ஜா, அமியகுமார் பக்லி, இஃதிதர் ஆலம்கான், ஸ்ரீராம் மூஸ்வி, ஜெயாமேனன், இர்ஃபான் ஹபீப், சுவீரா ஜெய்ஸ்வால், கேசவன்வெளுத்தாட், டி.மண்டல், ராமகிருஷ்ண சாட்டர்ஜி, அனிருத்ரே, பிரபாத் பட்நாயக், சி.பி.சந்திரசேகர், உல்பத் நாயக், ஜெயந்திகோஷ், மதன் கோபால் சிங், விவான் சுந்தரம், ஆர்.பி.பகுகுணா, ஒ.பி.ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வரலாற்றாய்வாளர்கள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட பிரபல அறிஞர்களும், அறிவு ஜீவிகளும் ஒருங்கிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்தான் பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பின் எதிர்விளைவுகளைக் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்தக்கட்டமாக என்ன நிகழ்ந்தாலும், அது விலை மதிப்பற்ற ஒன்றை தேசம் இழந்துவிட்டதாகும் என இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இந்த தீர்ப்பில் வரலாறு, விவேகமான அறிவு, மதசார்பற்றக் கொள்கையின் மதிப்பீடுகள் ஆகியவற்றை பரிசீலித்த முறை தீவிரமான சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.

இவ்வழக்கின் அடிப்படை, ஒரு இந்துக் கோயில் நிலைப்பெற்றிருந்த இடத்தில் மஸ்ஜித் கட்டப்பட்டது என்பதாகும். இரண்டு நீதிபதிகள் மேற்கொண்ட நிலைப்பாடு அகழ்வாராய்ச்சித் துறை நடத்திய அகழ்வாராய்ச்சி முடிவுகளிலிருந்து தெளிவான உண்மைகளுக்கு எதிரானதாகும்.

செங்கல் கட்டிகள் மற்றும், சுண்ணாம்புக்கூடு ஆகியவை அகழ்வாராய்ச்சியின் பொழுது கைப்பற்றப்பட்டதிலிருந்து மஸ்ஜிதிற்கு அடியில் கோயில் இருக்கவில்லை என்பதை நிரூபிக்கின்றன. நெடுந்தூண்கள் இருப்பதற்கு கூறும் அகழ்வாராய்ச்சித் துறையின் சர்வே அறிக்கை தூண்கள் கண்டுபிடிக்காத சூழலில் போலியாகும். இவர்களின் ஆவணங்கள் வல்லுநர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் விரிவான ஆய்விற்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும்.

ராமன் பிறந்த இடத்தில்தான் இதுநாள் வரை பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்தது என்ற வாதத்தை நிரூபிக்க ஆதாரங்கள் ஒன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதற்கு நீதிபதிகள் கூறும் ஆதாரம் என்னவெனில், தொன்றுத் தொட்டே இந்த நம்பிக்கை இருந்து வருகிறது என்பதே.

புராணக் கதைகளின் அடிப்படையில் இந்த நம்பிக்கையை அங்கீகரிப்பதோடு மட்டுமல்ல, இத்தகையதொரு நம்பிக்கையை சொத்துத் தகராறில் பயன்படுத்துவது தவறாகும்.

சட்டம், சமத்துவம் உள்ளிட்ட அனைத்து கொள்கைகளுக்கும் எதிரானது இத்தீர்ப்பு. அத்துமீறல்களுக்கும், தாக்குதல்களுக்கும் அங்கீகாரம் அளிக்கும் விதமாகவே இந்த தீர்ப்பு அமைந்துள்ளது மற்றொரு துர்பாக்கிய நிலையாகும்.

1949 ஆம் ஆண்டு அத்துமீறி பாப்ரி மஸ்ஜிதிற்குள் சிலை வைக்கப்பட்டதற்கு இத்தீர்ப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. 1992 ஆம் ஆண்டு மஸ்ஜித் இடிக்கப்பட்டதையும் இத்தீர்ப்பு நியாயப்படுத்துகிறது.

மஸ்ஜிதின் முக்கிய பகுதியை ஹிந்துக்களிடம் ஒப்படைக்கவேண்டும் என உத்தரவிடுவதன் மூலம் இது நிரூபிக்கப்படுகிறது.

இக்காரணங்களால்தான் இந்த தீர்ப்பு, மதசார்பற்ற கொள்கைகளுக்கும், நீதித்துறையின் கண்ணியத்திற்கும் சற்றும் பொருந்தாததாகும். இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ், பாலைவனத் தூது





பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் -பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா


கோழிக்கோடு,அக்.4:பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என கேரளமாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்ததும், அங்கு அத்துமீறி சிலைகள் வைக்கப்பட்டதும், 1992 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதும் தெளிவாக தெரிந்த பிறகும் நிலத்தின் உரிமை யாருக்கு என்பதனை நிர்ணயிப்பதற்கு பதிலாக கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு மாதிரியில் சமரசத்தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம்.

வரலாற்று உண்மைகளுக்கும், ஆதாரங்களுக்கும் மேலாக ஏதேனும் ஒரு பிரிவினரின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவது இந்திய நீதித்துறையின் வரலாற்றில் இது முதல் தடவையாகும்.

ஒரு பிரிவினருக்கு சொந்தமான நிலத்தை நம்பிக்கையின் பெயரால் இன்னொரு பிரிவினர் சொந்தம் கொண்டாடினால் அதற்கு சட்டரீதியான அந்தஸ்து வழங்கியிருப்பது உலகில் எங்குமே இல்லாத நடைமுறையாகும். இவ்வழக்கில் அதுதான் நடந்துள்ளது.

சொத்து தகராறை நம்பிக்கை பிரச்சனையாக மாற்றுவது நீதித்துறையின் அந்தஸ்திற்கு உகந்ததல்ல. இது நீதித்துறையில் கடுமையான எதிர்விளைவுகளுக்கு வழிவகுப்பதாகும். சுதந்திரத்திற்கு முன்பு வழங்கப்பட்ட இவ்வழக்குத் தொடர்பான தீர்ப்புகள் அனைத்துமே முஸ்லிம்களுக்கு சாதகமாகவே வந்துள்ளன. நீதித்துறையின் மீது நம்பிக்கைவைத்துள்ள சமூகம் என்ற நிலையில் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் என முன்பே முஸ்லிம்கள் கூறியிருந்தனர். ஆனால், நம்பிக்கைத் தொடர்பான விவகாரத்தை தீர்மானிப்பது நீதிமன்றம் அல்ல எனக்கூறியவர்கள் தற்பொழுது நீதிமன்றத் தீர்ப்பைக் குறித்து நல்லுபதேசம் செய்வதன் பின்னணியில் உள்ள விருப்பம் தெளிவானது.

1949 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜிதிற்குள் அத்துமீறி நுழைந்து சிலைகளை வைத்ததும், 1986 இல் மஸ்ஜிதின் பூட்டுகளை திறந்துக் கொடுத்ததும், மதில் சுவருக்குள் பூஜை நடத்த ஹிந்துக்களை அனுமதித்ததும், முஸ்லிம்களுக்கு மஸ்ஜிதிற்குள் நுழைய அனுமதி மறுத்ததும், தற்காலிக கோயிலுக்கு சட்ட அந்தஸ்து வழங்கியதுமெல்லாம் நீதிமறுக்கப்பட்டதன் உதாரணங்களாகும்.

லிபர்ஹான் கமிஷனின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு காட்டிவரும் தயக்கமும் நீதிமறுப்பின் இறுதி உதாரணமாகும்.

பாப்ரி மஸ்ஜித் வழக்கில் சட்டரீதியான போராட்டத்தை தொடர்வதுதான் முஸ்லிம்களுக்கு முன்னால் உள்ள வழி. நீதி கிடைக்கும்வரை சட்டரீதியான, ஜனநாயகரீதியான போராட்டங்களை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்றும் களத்தில் நிற்கும். இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்



அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் கண்டனம்


சென்னை,அக்.3:அயோத்தி வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பாக கூறியிருக்கிறார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது, அநீதியானது. இத்தகைய தீர்ப்புகளால் நாட்டில் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சீர்குலைந்து அமைதியின்மை ஏற்படவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.

பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதுதான் பிரச்சனையின் அடிப்படை. அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பெரிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம், அதைச் சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் அணுகாமல், ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.

450 ஆண்டுகாலமாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததும், அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததும், 1949ல் அங்கே வலுக்கட்டாயமாக ராமர் சிலைகளை உள்ளே நிறுவி, அதைக் காரணம் காட்டி மசூதியை இழுத்து மூடியதும், 1992ல் இந்துத்துவச் சக்திகள் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததும் நம் கண்முன்னே நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள். ஆனால், ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரமோ ஆவணமோ எதுவும் இல்லை என்பதும் ராமர் ஒரு புராண நாயகன்தான் என்பதும் ஒரு சாதாரண பாமரனுக்குக்கூடப் புரியும். இது இரண்டு நீதிபதிகளுக்குப் புரியாமல் போனது வியப்பளிக்கிறது.

மேற்படி உண்மைகளை மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பில் சொல்லியும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் அது மூடி மறைக்கப்படுகிறது.

அயோத்தி நில வழக்கை ஆதாரங்களின் அடிப்படையில் அணுகி தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.

பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அத்வானி உள்ளிட்ட இந்துத்துவச் சக்திகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைச் சுதந்திரமாக உலவவிட்டுள்ள நீதிமன்றமும் சட்டமும், இப்போது மசூதியையும் கபளீகரம் செய்து இந்துத்துவச் சக்திகளிடம் ஒப்படைக்கத் துணிந்திருப்பது மிகப் பெரும் மோசடியாகும். ஏற்கனவே நம்பிக்கை இழந்து விரக்தியில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு இது மேலும் ஆத்திரமூட்டும் செயலாகும்.

இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது ஜனநாயகச் சக்திகளின் கடமை என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகிறது.

பாபர் மசூதி இருந்த இடத்தில் திரும்பவும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராடுவோம் என்று மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது." இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.



பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: மனுதாரர் அஸ்லம் பூரே இதய அதிர்ச்சி மூலம் மரணம்


புதுடெல்லி,அக்.4:பாப்ரி மஸ்ஜித் தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த மனுக்களை தாக்கல் செய்து சாதகமான தீர்ப்புகளைப்பெற காரணமாகயிருந்த அஸ்லம் பூரே பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான தீர்ப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட இதய அதிர்ச்சி மூலம் மரணமடைந்தார்.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தை 3 ஆக பங்கீடுச் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மன நிம்மதியிழந்து காணப்பட்ட அஸ்லம் பூரே கடந்த சனிக்கிழமை அதிகாலை மரணமடைந்தார்.

தனது தந்தை, பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தார் என அவரது மகன் இம்ரான் பூரே கூறுகிறார். இத்தகையதொரு தீர்ப்பை அல்ல, முஸ்லிம்கள் எதிர்பார்த்தது என அஸ்லம் பூரே கூறியதாக அவரது மகன் தெரிவிக்கிறார். பின்னர் அதிகமாக ஒன்றும் பேசாத அஸ்லம் பூரே, பெரும்பாலான நேரமும் தனது அறையில் தனிமையில் படுத்திருந்தார். அவருடைய நிலைமை வெள்ளிக்கிழமை இரவில் மோசமடைந்தது. பழைய டெல்லியில் தரியாகஞ்ச் என்ற இடத்தில் வசித்துவந்தார் அஸ்லம் பூரே.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த 2.7 ஏக்கர் நிலத்தை சுற்றுத்தலமாக்க திட்டமிட்ட அன்றைய உ.பி மாநில முதல்வர் கல்யாண்சிங்கின் தீர்மானத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகி, பாப்ரி மஸ்ஜிதில் பழைய நிலைத்தொடர்வதற்கு சாதகமான தீர்ப்பை பெறக்காரணமாகயிருந்தவர் அஸ்லம் பூரே.

பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் பூஜை நடத்துவதற்கான விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முயற்சியை தடைச்செய்ததும் அஸ்லம் பூரே சமர்ப்பித்த மனுதான் காரணமாகும்.

2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் பூஜை நடத்துவதற்கு எதிராக அஸ்லம் பூரே சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை அப்பிரதேசத்தில் எவ்வித வழிபாடுகளும் நடத்தக்கூடாது என தீர்ப்பு வழங்கியிருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்




பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டனர் - முலாயம் சிங்


லக்னோ,அக்.2:பாப்ரி மஸ்ஜிதின் உரிமைத் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மூலம் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக முஸ்லிம்கள் கருதுவதாக சமாஜ்வாடிக் கட்சியின் தலைவரும், உ.பி.மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

"வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்புக் கூறாமல், நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு கூறியதில் நான் அவநம்பிக்கைக் கொள்கிறேன். தேசம் மற்றும் நீதித்துறையின் எதிர்காலத்திற்கு இது உகந்தது அல்ல." என முலாயம் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

"அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு எதிர்காலத்தில் பிரச்சனைகளை உருவாக்கும். தீர்ப்பில் முஸ்லிம்களுக்கு நிராசையும், ஏமாற்றப்பட்டோம் என்ற உணர்வும் மேலோங்கியுள்ளது.

முஸ்லிம்கள் தற்பொழுது உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்கள். உச்சநீதிமன்றத்தில் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு கூறப்படும் என நான் எதிர்பார்க்கிறேன்.

1990 ஆம் ஆண்டில் அயோத்தியில் தாக்குதல் நடத்த முன்னேற்பாடுகள் நடக்கின்றன என நான் எச்சரித்திருந்தேன். சென்னையில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்திலும் இதனைக் குறித்து தெரிவித்தேன்." இவ்வாறு முலாயாம் தெரிவித்தார்.

முலாயாம்சிங் யாதவின் அறிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும், மாயாவதியும் களமிறங்கியுள்ளனர். மாநிலத்தின் அமைதி சூழலை தகர்ப்பவர்கள் யாராகயிருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முலாயம் சிங்கின் பெயர் குறிப்பிடாமல் மாயாவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எந்தவொரு தனி மனிதர்களின் அறிக்கையின் மூலம் கொந்தளிப்பிற்கு உள்ளாகக் கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அயோத்தியில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அறிக்கை வெளியிடவேண்டாம் என உ.பி காங்கிரஸ் கட்சி முலாயம் சிங்கிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தீர்ப்பைக் குறித்து உச்சநீதிமன்றத்தில்தான் முறையிட வேண்டுமெனவும், தீர்ப்பில் பா.ஜ.கவிற்கும், முலயாம்சிங்கிற்கும் சாதகமான நிலையில்லாததால் இரு பிரிவினருக்கு இத்தீர்ப்பு நிராசையை ஏற்படுத்தியுள்ளதாக உ.பி. மாநில சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் ப்ரமோத் திவாரி தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்